அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு, சேற்றுக்குடா பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே தனது நோய்க்கான மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் மரணமடைந்துள்ளார்.
வழமை போன்று நேற்று புதன்கிழமை இரவு உணவு உட்கொண்டு விட்டு நோய்கான மாத்திரைகளையும் உட்கொண்டு மேற்படி பெண் உறங்கச் சென்றுள்ளார். இன்று வியாழக்கிழமை அதிகாலை தனது மனைவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அவதானித்த கணவர், மனைவியை உடனே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றார்.
அந்தப் பெண்ணுக்கு அங்கு சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்பவ இடத்துக்குச் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டு, சடலத்தைப் பிரேத பரிசோதனைக்குப் பணித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.