இலங்கை இந்திய மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசமட்ட பேச்சுவார்த்தையினை முன்னெடுத்து பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எட்டவேண்டும் என்று வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகபேச்சாளர் அன்னராசா தெரிவித்தார்.
இலங்கை இந்திய மீனவர் சங்க தலைவர்களுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை வவுனியா கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது.
அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
2016ஆம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இன்றுவரை நடைமுறைப்படுத்தாமையினால் தமிழ்நாட்டிலும் வடமாகணத்திலும் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே கடந்த 9 வருடங்களாக நடவடிக்கை மேற்கொள்ளாததையிட்டு இருநாட்டு மீனவர்களும் 9 வருடங்களுக்கு பின்பு இன்று கலந்துரையாடியுள்ளோம். இந்த கலந்துரையாடல் மூலம் நாம் மிக்க மகிழ்ச்சியடைந்துள்ளோம்.
இருநாட்டிலும் பாதிக்கப்படுவது மீனவர்களே. எனவே இதனை தீர்க்கவேண்டிய அவசியத்தினையும் அதற்கான பொறிமுறைகள் தொடர்பாகவும் இன்று கலந்துரையாடியுள்ளோம்.
இதன் அடுத்தகட்டமாக இலங்கையின் கடற்றொழில் அமைச்சரும் அதிகாரிகளும் அதேபோன்று இந்திய பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோர் இந்த பிரச்சனையை அரசமட்ட பேச்சுவார்த்தையாக கொண்டுசென்று அதனூடாக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படவேண்டும் என்பதை இரு அரசாங்கங்களுக்கும் வலியுறுத்தி முன்வைக்கிறோம்.
அதேபோல தொடர்ச்சியாக இருநாட்டு மீனவர்களும் கலந்துரையாடுவதுடன். இருநாட்டு கடல்வளமும் பாதுகாக்கப்படவேண்டும் என்ற விடயத்தில் இருதரப்பும் இணங்கியிருக்கிறது.
அத்துடன் தமிழ்நாட்டின் ஏனைய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களுடனும் கலந்துரையாடி இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆரம்ப முயற்சியாக இந்த பேச்சுவார்த்தை அமைந்துள்ளது.
எனவே இருநாட்டு மீனவர் பிரச்சினைக்கான தீர்வு அரசின் அனுசரணையோடு மிகவிரைவில் எட்டப்படும் எட்டுவோம் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்பட்டுள்ளது. இது மனிதாபிமானத்தோடு கையாளவேண்டிய விடயம். இந்த கலந்துரையாடல் தொடரும். என்றார்

