தற்போது நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை குழப்பும் வகையில் போலியான அறிவித்தல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதாக கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்தப் போலி அறிவித்தலில் இவ்வருட விஞ்ஞானப் பாட பரீட்சை வினாத்தாள் பாடவிதான பரப்புக்கு அப்பால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்குப் பதிலாக விஞ்ஞான பாடத்துக்கு தோற்றிய சகல மாணவர்களுக்கும் மேலதிகமாக 8 புள்ளிகள் வழங்கப்படுவதாகவும் 65 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட சகல மாணவர்களுக்கும் A சித்தி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறான ஒரு தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் பல முக்கிய தீர்மானங்கள் இருப்பின் அவை உரிய நிறுவனங்களின் கடிதத் தலைப்பில் அங்கீகரிக்கப்பட்ட ஊடக பரப்பில் அல்லது இணையத்தின் ஊடாக மட்டுமே அறிவிக்கப்படும் எனவும் போலியான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் கல்வி அமைச்சு பரீட்சை திணைக்களம் ஆகியன அறிவித்தல் விடுத்துள்ளன.