வவுனியா வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்தில் அமைந்துள்ள பொலிஸ் வீரச்சாவு அடைந்தவர்களின் நினைவுத்தூபிக்கு அருகே இன்று (21.03.2024) காலை 7.30 மணியளவில் உயிர்நீத்த மற்றும் யுத்தத்தில் உயிரிழந்த பொலிசாரின் 161வது பொலிஸ் வீரர்கள் தினம் வன்னி மற்றும் கிளிநொச்சி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் சமாந்த விஐயசேகர தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கைப் பொலிஸாரால் வருடா வருடம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொலிஸ் வீரர்கள் தினம் இன்று 161வது தினமாகும். அத்துடன் யுத்தகாலத்தில் உயிர்நீத்த பொலிஸாரும் இத்தினத்தில் நினைவுகூரப்பட்டு வருகின்றனர். வவுனியா பிராந்திய நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீரர்கள் நினைவுத்தூபியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சோமரத்ன விஐயமுனி, வவுனியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அசோக குமார மற்றும் வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி, உயிரிழந்த பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற பொலிஸார், வவுனியா பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பிரிவிலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸார் எனப் பலரும் கலந்துகொண்டு உயிர் நீத்த பொலிசாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.










