ஏப்ரல் 3ம் திகதி வரை முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (20) உத்தரவிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, நேற்று புதன்கிழமை (19) காலை தேசபந்து தென்னக்கோன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து, அவர் இன்றுவரை விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவரை இன்றையதினம் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்திய போது, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.