ஆசனம், பதவிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கொள்கையில் உறுதியாகப் பயணிக்கக் கூடிய எம்மைப் பலப்படுத்துவதுதான் காலத்தின் கட்டாயம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை யாழ்ப்பாணத்தில் நேற்று தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருக்கின்ற ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்கு இன்று (நேற்று) வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளோம். ஏனைய எட்டு உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை நாளை (இன்று) மதியத்துக்குள் தாக்கல் செய்வோம்.
வடக்கு, கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பு முழுவதற்கும் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தக்கூடிய அத்தனை சபைகளுக்கும் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசிய பேரவை என்ற பெயரில் எங்களுடைய கூட்டணியை உருவாக்கியுள்ளோம்.
இந்த முயற்சி கொள்கை அடிப்படையில் எங்கள் மட்டத்திலே ஏற்பட்ட இணக்கப்பாடு காரணமாக முன்னெடுக்கப்படுகின்றது. எம்மைப் பொறுத்தவரையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிற்பாடு தமிழ்த் தேசிய அரசியலைப் பலப்படுத்த வேண்டிய ஒரு கட்டாயத் தேவை தென்படுகின்றது.
அந்தவகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் பேச்சுகளை ஆரம்பித்திருந்தது. ஆனால், துரதிஷ்டவசமாக அந்தப் பேச்சுகளை இலங்கைத் தமிழரசுக் கட்சி ஒருதலைப்பட்சமாக எந்தவிதமான நியாயமும் இல்லாமல் முறித்தது.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினுடைய தலைவரோடு நாங்கள் பேச்சுகளை நடத்திக்கொண்டிருந்தாலும் கூட அவருடைய அந்தக் கூட்டணி எங்களைத் தவிர்த்து தமிழ்த் தேசியத்துக்கு மாறாகச் செயற்பட்ட ஒரு சில தரப்புகளையும் சேர்த்து கூட்டணி முயற்சியொன்றை எடுக்க ஆரம்பித்தார்கள்.
அந்தப் பின்னணியில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி வரவு – செலவுத் திட்டம் தொடர்பான வாக்கெடுப்புக்கு ஆதரவு வழங்கியது உள்ளிட்ட சில குறிப்பிட்ட காரணங்களால் தமிழ்த் தேசியக் கட்சி அதிருப்தி அடைந்து கொள்கை வழியிலேயே எங்களோடு சேர்ந்து பயணிக்க விரும்பினார்கள். நாங்களும் அதனை விரும்பினோம்.
ஜனநாயகத் தமிழரசுக் கட்சியினுடைய உறுப்பினர்களும் எங்களுடன் சேர்ந்து பயணிப்பதற்குப் பேச்சில் ஈடுபட ஆரம்பித்தார்கள். அவர்களும் தற்போது ஒன்றாகப் பயணிக்க முடிவெடுத்திருக்கின்றார்கள்.
ஐங்கரநேசனுடைய தமிழ்த் தேசிய பசுமை இயக்கமும் எங்களுடன் இணைந்துள்ளார்கள்.
அதேபோன்று அருந்தவபாலன், தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாக அறிவித்திருந்தாலும் கூட அவரும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் ஒற்றுமையாகப் பயணிப்பதற்கு ஒரு முயற்சி ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்று விரும்பினார். அந்தவகையில் எங்களுடைய இந்த முயற்சியோடு அவரும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் நாங்கள் ஒரு கூட்டணியை ஆரம்பித்துள்ளோம். இந்த முயற்சி எதிர்காலத்தில் பலமடையும் என்று நம்பிக்கையிலே நாங்கள் இருக்கின்றோம்.
கொள்கை அடிப்படையில் இந்த முயற்சியை நாங்கள் முன்கொண்டு செல்வோம்.
இந்தக் கூட்டு முயற்சியை நாங்கள் எடுத்தபோதும் ஆசனங்களுக்கோ, எண்ணிக்கைகளுக்கோ அடிபட்டு செயற்பட்டதாக இல்லை. பெரும்பான்மையான விட்டுக் கொடுப்போடு இந்த வேட்பாளர் பட்டியலைத் தயாரித்திருக்கின்றோம்.
இந்தப் பட்டியல் விவரங்கள் வெளிவரும்போது அனைவரும் இதனை ஏற்றுக்கொள்வார்கள்.” – என்றார்.