புதுக்குடியிருப்பு அச்சலங்குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் (12.03.2025) மாலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதி அச்சலங்குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹேரத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து
நேற்றையதினம் பொலிஸ் சார்ஜன் (69515) திலகரத்ன, பொலிஸ் கொஸ்தாபல்களான (72485) ஜெயசூரிய, (83141) நிரோசன், (89159 ) விஜரத்ன, ( 36841) குமார, (91451) குமார, (107058 ) டிதுர்சன், (89996) சம்பத் மற்றும் விஷேட புலனாய்வு பிரிவினர் இணைந்து நடாத்திய திடீர் சோதனை நடவடிக்கையின் போது அச்சலங்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா 418 லீற்றர், கசிப்பு 60 லீற்றர், 4 பரலும் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் வட்டுவாகல் பகுதியை சேர்ந்த 22, 19 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் இன்றையதினம் (13.03.2025) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது எதிர்வரும் (25.03.2025) திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இதன் போது தெரிவித்திருந்தார்.

