“பொறுப்புக்கூறல் விடயம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசு இம்முறையும் சாதகமான தீர்வினையோ அல்லது புதிய முன்மொழிவுகளையோ முன்வைக்கவில்லை. பொறுப்புக்கூறல் விடயத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த அரசும் கடந்த காலங்களைப் போன்றே செயற்படுகின்றது.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் தற்போது நடைபெறுகின்றது. வெளிவிவகார அமைச்சர் ஜெனிவாவுக்குச் சென்று பல விடயங்களைக் கூறியுள்ளார். ஆனால், பொறுப்புக்கூறல் விடயத்தில் கடந்த காலங்களில் செய்த விடயங்களை விட புதிய அரசின் புதிய முன்மொழிவுகள் எதனையும் கூறவில்லை. வடக்கு, கிழக்கு மக்கள் பொறுப்புக்கூறல் விடயத்தில் மிகவும் கரிசனையுடன் உள்ளனர். கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
எமது மக்களைக் கொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றோம். ஆனால், கடந்த காலங்களில் அரசுகள் செய்ததைப் போன்றே தற்போதைய அரசும் செயற்படுகின்றது என்பது தெளிவாக விளங்குகின்றது.
காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் உள்ளிட்ட பொறிமுறைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தற்போது கூறியிருந்தாலும் இவை அனைத்தும் தமிழ் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் நிராகரித்த பொறிமுறைகளாகும்.
இதேவேளை, வடக்கு மக்கள் வாக்கு வழங்கியுள்ளனர். உங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசமைப்பு பற்றி தெளிவாகக் கூறியுள்ளீர்கள். ஆனால், அது தொடர்பில் இன்று வரையில் ஒரு வார்த்தையேனும் கூறவில்லை. எதிர்க்கட்சித் தலைவரின் பெயரை புதிய அரசமைப்பில் நிரந்தரப் பெயராக உள்ளடக்கவுள்ளதாக சபாநாயகர் கூறியுள்ளார்.
அமைச்சர் சந்திரசேகரிடம் ஒன்றைக் கேட்கின்றேன். வடக்கு மக்கள் புதிய அரசமைப்பில் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கின்றனர். அது பற்றி நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள். அதிகாரப் பகிர்வை விடுவோம். ஆனால், புதிய அரசமைப்பு வருமா? வராதா? வந்தால் அதில் உள்ளடக்கம் என்ன?
பொறுப்புக்கூறல் விடயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான ஒதுக்கீடுகளும் இன்றைய விவாதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினையில் பொறுப்புக்கூறல் என்பது மிகவும் பிரதானமான விடயமாகும். ஆனால், வெளிவிவகார அமைச்சர் எந்தச் சாதகமான பதிலையும் வழங்கவில்லை. இதற்கு எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் தக்க பதிலளிப்பார்கள்.” – என்றார்.