“கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் சட்டத்தரணி வேடம் தரித்து துப்பாக்கிதாரி சாட்சிக்கூண்டில் இருந்த சந்தேகநபர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். நீதிமன்றத்தில் நீதிபதிகளினதும், சட்டத்தரணிகளினதும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை. இது பாரதூரமானது. இந்த விடயம் குறித்து அரசு விசேட கவனம் செலுத்த வேண்டும்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
“கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிதாரி ஒருவர் சட்டத்தரணியைப் போன்று வேடம் தரித்து நீதிபதிகள் முன்னிலையில் சாட்சிக் கூண்டில் இருந்த சந்தேகநபர் மீது துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளார். இது பாரதூரமானதொரு பிரச்சினையாகும்.
அதேவேளை, காலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுப் படு கொ லை செய்யப்பட்டுள்ளனர். இந்த நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது.
நீதிமன்றத்தில் கூட துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதால் நீதிபதிகள் எவ்வாறு சுதந்திரமாகச் செயற்பட முடியும்? இதனை அலட்சியப்படுத்த முடியாது.
இவ்வாறான செயற்பாடுகளினால் நீதிமன்றத்தில் நீதிபதிகளினதும், சட்டத்தரணிகளினதும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை.
பதில் பொலிஸ்மா அதிபர் தொடர்பில் ஜனாதிபதி சிறந்த முறையில் பேசுகின்றார். ஆனால், கடந்த ஓரிரு மாதங்களில் மாத்திரம் 78 பேர் படு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
படு கொலைகள் குறித்து அரசு கடுமையான முறையில் அவதானம் செலுத்த வேண்டும். இல்லாவிடின் இது எங்கு செல்லும் என்பது எமக்குத் தெரியாது.” – என்றார்.