”உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே இருக்கின்ற கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டு, பின்னர் ஒன்றாக ஆட்சியமைப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. அந்த முடிவு சரியான விதத்தில் புரிந்துகொள்ளப்படாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாங்கள் பிரித்துவிட்டோம் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.” -இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
”எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக தொகுதி அடிப்படையிலான கலந்துரையாடல்கள் தற்போது நடந்துகொண்டிருக்கின்றன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 17 சபைகள் உள்ளன. இந்தச் சபைகள் அமைந்துள்ள வெவ்வேறு தொகுதிகளில் கலந்துரையாடி, அதன்பின்னர் மாவட்டக் கிளையில் இது குறித்து பேசி சில முடிவுகளை எடுக்க வேண்டிய தேவையுள்ளது.
கடந்த வாரத்தில் மாவட்டக் கிளையில் தீர்மானம் எடுத்தோம். அதன்படி ஒவ்வெரு தொகுதிகளிலும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
எமது கட்சி தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை சென்ற தடவை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவே நாங்கள் எடுத்திருந்தோம்.
அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே இருக்கின்ற கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டு, பின்னர் ஒன்றாக ஆட்சியமைப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. அந்த முடிவு சரியான விதத்தில் புரிந்துகொள்ளப்படாமல், நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரித்துவிட்டோம் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால், இந்தத் தேர்தல் முறைமையைக் கருத்திற்கொண்டு தனியாக ஒரு கட்சி ஆட்சியமைப்பது மிகவும் கஷ்டமான விடயம் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே, இப்போது, நாங்கள் சிபாரிசு செய்த அந்த முறை சிறந்தது என்ற எண்ணம் ஏனைய கட்சித் தலைவர்கள் மத்தியிலும் காணப்படுகின்றது. ஆகவே, அவர்களிடமும் நாங்கள் இது குறித்து பேசியிருக்கின்றோம்.
வெவ்வேறு இடங்களில் சில வேளைகளில் சற்று வித்தியாசமான அணுகுமுறைகளை நாங்கள் கையாள வேண்டியுள்ளதாக இருக்கின்றது. இந்தத் தேர்தல் முறைமையை எப்படியாக எங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது என்பது குறித்து ஒவ்வொரு சபையாக நாங்கள் ஆராய வேண்டிய தேவை இருக்கின்றது.” – என்றார்.