கடந்த 09-02-2025 மன்னார் வடக்கு கடற்பரப்பின் கிளிநொச்சி நீரியல் வளத்திணைக்கள எல்லைக்குள் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களின் வழக்கு இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் நீதவான் இஸ்மாத் ஜெமீல் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
முதலாவதாக ஒரு படகில் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்கள் மீது குற்றங்கள் முன்வைக்கப்பட்டன. இதன்போது, அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் நுழைந்தமைக்காக 11 மீனவர்களுக்கும் 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இலங்கை கடல் எல்லையில் நுழைந்து மீன்பிடி உபகரணங்களைக்கொண்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன், இலங்கையில் தடைசெய்யப்பட்ட இழுவை மடி படகைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டமைக்காக 11 மீனவர்களுக்கும் 50000 ரூபா குற்றம் பணம் அறவிடப்பட்டது. இதனை செலுத்த தவறின் 06 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த 11 மீனவர்களில் ஒருவர் உரிமையாளராகவும் படகு ஓட்டியாக காணப்படுவதால் படகு ஓட்டிக்கான தண்டனையாக 6 மில்லியன் ரூபா செலுத்துமாறும் தவறின் 06 மாத சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என உத்தரவிட்டார்.
அத்துடன், மீனவர்களின் தொலைபேசி பணம் தவிர்ந்த படகு உள்ளிட்ட அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
மற்றொரு படகில் கைது செய்யப்பட்ட 03 இந்திய மீனவர்கள் மீது குற்றங்கள் முன்வைக்கப்பட்டன. இதன்போது அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் நுழைந்தமைக்காக 03 மீனவர்களுக்கும் 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இலங்கை கடல் எல்லையில் நுழைந்து மீன்பிடி உபகரணங்களைக்கொண்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன் இலங்கையில் தடைசெய்யப்பட்ட இழுவை மடி படகைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டமைக்காக 03 மீனவர்களுக்கும் 50000 ரூபா குற்றப் பணம் அறவிடப்பட்டது. இதனை செலுத்த தவறின் 06 மாத சிறைத்தண்டனை என உத்தரவிடப்பட்டது.
குறித்த மூன்று இந்திய மீனவர்களில் ஒருவருக்கு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தினால் 5 வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அந்த காலப்பகுதியில் மீண்டும் ஒரு குற்றத்தை செய்தமையால் 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.