மகா கும்பமேளா நிகழ்வினை முன்னிட்டு புது டெல்லி ரயில் நிலையத்தில் நேற்று சனிக்கிழமை (15) இரவு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
ஐந்து குழந்தைகள், ஒன்பது பெண்கள் மற்றும் நான்கு ஆண்களே உயிரழந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் தற்போது டெல்லியின் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனை மற்றும் லேடி ஹார்டிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2025 மகா கும்பமேளா திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் உத்தரப் பிரதேசின் பிரயாக்ராஜ் நகருக்கு சென்று கொண்டிருந்தபோது இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ரயில் புறப்படுவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் சுமார் 1,500 பொது டிக்கெட்டுகள் விற்பனையானது நிலைமையை மோசமாக்கியதாகவும் அதிகப்படியான கூட்டத்திற்கு வழிவகுத்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாவும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 25 இலட்சம் ரூபாவும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாவும் வழங்குவதாக டெல்லி ரயில்வே திணைக்களம் ஞாயிற்றுக்கிழமை (16) காலை அறிவித்துள்ளது.
சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதவிட்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,
புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் ஏற்பட்ட அனர்த்தம் குறித்து வேதனை அடைந்தேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த நெரிசலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிகாரிகள் உதவி வருகின்றனர் – என கூறினார்.