கடந்த காலபோக நெற்ச்செய்கையில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் அனர்த்தங்களினால் பாரிய பாதிப்பை எதிர்கொண்டாலும் சுற்றுநிருபத்தை காரணம் காட்டி இழப்பீடுகளை நியாயமாக கிடைக்காமல் செய்யும் செயற்பாட்டில் கிளிநொச்சி கமநல காப்புறுதிச் சபை என கிளிநொச்சி மாவட்ட கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன தலைவர் சுப்பிரமணியம் யதீஸ்வரன் குற்றம் சாட்டினார்.
இன்றைய தினம் கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் எமது விவசாயிகளை பெரியளவில் பாதித்திருக்கிறது. இயற்கை அனர்த்தங்களினால் கடந்த காலபோகத்தில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடுகளை பெறுவதற்கு கமநல காப்புறுதிச்சபை மூலம் விண்ணப்பித்திருந்த போதும் அவர்கள் அதில் அக்கறை செலுத்தவில்லை.
கமநல காப்புறுதி சபையானது கமநல சேவை நிலையங்கள் மூலம் பயிரழிவுகளின் விபரங்களை உள்வாங்குமாறு கூறியது. கமநல சேவை நிலையங்களை விவசாயிகள் வலியுறுத்தியதன் பிரகாரம் அவர்களும் முழுமையான விவசாயிகளின் பாதிப்பை பார்வையிடாது இது நோயினால் பாதிக்கப்பட்டது. இந்த அழிவுக்கான இழப்பீடு வழங்க முடியாது என சுற்றுநிருபம் குறிப்பிடுவதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் கடந்த கால அரசாங்கத்திலும் இவ்வாறான அழிவுகள் நடைபெற்ற போது இழப்பீடுகள் கிடைத்தன. தற்போது கமநல காப்புறுதிச்சபை தர மறுக்கின்றது. தகவல் அறியும் சட்டம் மூலம் கமநல காப்புறுதிச்சபையிடம் இதுவரை பதிவு செய்யப்பட்ட அழிவு பற்றிய விபரங்களை கோரியுள்ளேன் என தெரிவித்தார்.
அத்துடன் கடந்த காலங்களில் எவ்வாறு வயல் நிலங்கள் அனர்த்தத்திற்கு உள்ளானது என்ற விடயத்தை சமூக வலைத்தளங்கள் மூலமே அவதானிக்க முடிகின்றது எனவும் குறிப்பிட்டார்.
கடந்த மூன்றாம் திகதி தேசிய சம்மேளனம் விவசாய அமைச்சரை சந்தித்திருந்தது. இதன் போது அமைச்சரிடமும் குறித்த விடயத்தை தெரிவித்திருந்ததாக தெரிவித்தார். விவசாயிகளின் பயிரழிவுக்கு கமநல காப்புறுதி சபை நியமான தீர்வை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.