“நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு உளவியல் பிரச்சினை உள்ளது. ஆகவே, அவரை மனநல மருத்துவரிடம் அனுப்புங்கள்.” – இவ்வாறு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை சிறப்புரிமை மீறல் பிரச்சினை முன்வைத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, குறிப்பிட்ட ஒருசில விடயங்களைச் சுட்டிக்காட்டி ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றியபோதே நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“நாடாளுமன்ற உறுப்பினரான இவரின்(அர்ச்சுனாவை நோக்கி) செயற்பாடுகள் தொடர்பில் எங்களுக்குப் பிரச்சினைகள் உள்ளன. இவர் உங்களை (சபாநாயகரை) நோக்கி வெட்கம் என்று தகாத வார்த்தைகளைப் பிரயோகிக்கின்றார்.
அத்துடன் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான விடயம் என்றும் கூறுகின்றார். இங்கே சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடுகள் கிடையாது. இங்கே சிறுபான்மை என்று நாங்கள் எவரையும் கதைப்பதில்லை. பெரும்பான்மை என்று எவரும் செயற்படுவதில்லை.
இவ்வாறான கருத்துக்களுக்கும், செயற்பாடுகளுக்கும் சபையில் இடமளிக்க வேண்டாம். இவருக்கு (அர்ச்சுனாவுக்கு) தலையில் பிரச்சினை உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரை மனநல மருத்துவரிடம் அனுப்புங்கள் என்று வலியுறுத்துகின்றேன்.” – என்றார்.