தங்காலை குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி, மாத்தறை – வீரகெட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கம்புருபிட்டிய சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் கொழும்பு – கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்ட ஒரு சார்ஜென்ட் உள்ளிட்ட நான்கு அதிகாரிகள், பதில் பொலிஸ் அதிபரால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை மாலிம்பட பொலிஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரை சித்திரவதை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தொடர்ந்தே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நான்கு பொலிஸ் அதிகாரிகளையும் தலா 25,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு மாத்தறை மேல் நீதிமன்றம் ஜனவரி 27 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
மாத்தறை மாலிம்பட பொலிஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த தில்ஷான் மதுசங்க என்ற இளைஞன் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் இந்த அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்த நிலையில் வழக்கு விசாரணை பெப்ரவரி 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.