“மின்சக்தித் துறையை உள்ளடக்கிய அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் தீவிர மறுசீரமைப்புகளின் ஊடாகவே அது சார்ந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். மாறாக பொய்யான தகவல்கள் மூலம் மின் விநியோகத் தடை பற்றிய நிலைமைகளைச் சரி செய்ய முடியாது.” – இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் எம்.பி.எஸ்.சமரசேகர கடந்த ஆண்டு நவம்பரில் அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றை தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“மின் தடைக்கு முதலில் குரங்கின் மேல் குற்றச்சாட்டை முன்வைத்த தற்போதைய அரசு, பின்னர் அந்தக் குற்றச்சாட்டை முந்தைய அரசு மீது மாற்றியது.
ஆனால், உண்மையான பிரச்சினை என்ன? சூரிய மின்சக்தியின் மேம்பாடும், குறைந்த மின் விநியோக காலங்களை முகாமை செய்ய முடியாத பலவீனமான மின் வலையமைப்பின் இருப்பும்தான் காரணமாகும்.
பொய்யான தகவல்கள் மூலம் மின் விநியோகத் தடை பற்றிய நிலைமைகளைச் சரி செய்ய முடியாது. அவற்றைச் சரி செய்வதற்கான ஒரே வழி, மின்சக்தித் துறையை உள்ளடக்கிய அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் தீவிர மறுசீரமைப்புகள்தான்.
உண்மையான மாற்றம் ஆரம்பமாகும் போது அது வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும்.” – என்றார்.