தமிழர்களாகிய நாங்கள் எங்களுடைய அடையாளங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காக எமது வரலாற்றை நாங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்பதும் எமக்கு காலம் தந்த கடமையாக உள்ளது என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசு கட்சியின் நாட்டான் பிரதேச வேட்பாளர்களை ஆதரித்து நேற்று வெள்ளிக்கிழமை (25) மாலை நானாட்டான் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார கூட்டம் இடம் பெற்றது.
இப் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
தமிழர்களின் அடையாளம், மன்னார் மாவட்டத்தில் உள்ள தமிழர்கள் தமிழரசுக் கட்சியில் இருக்கிறார்கள். அவர்களுடைய எண்ணம் எல்லாம் நாங்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்கின்ற அடிப்படையில் மன்னார் நகர சபை, மன்னார், நானாட்டான், மாந்தை மேற்கு பிரதேச சபை உள்ளிட்ட நான்கு சபைகளையும் நாங்கள் கைப்பற்றுவதற்கு உழைத்துக் கொண்டு இருக்கின்றோம்.
எனவே தமிழ் மக்கள் மாற்றுக் கட்சிக்கு வாக்களிக்காது வீட்டுச்சின்னத்திற்கு வாக்களித்து தமிழர்களாக நாங்கள் தொடர்ந்து இந்த பிரதேசத்தில் எமது அடையாளங்களுடன் வாழ வேண்டும்.
இலங்கை தமிழரசுக் கட்சி என்ன செய்தது என்று பலருக்கு கேள்வி உள்ளது. இலங்கை தமிழரசு கட்சி தமிழர்களுடைய கட்சி என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நான் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட தலைவராக இருக்கின்றேன் என்று சொன்னால் என்னை தெரிவு செய்வது இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட உறுப்பினர்கள்.
இன்று நாட்டின் ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இருக்கிறார். இதற்கு முன்னர் பலர் நாட்டின் ஜனாதிபதியாக இருந்துள்ளனர்.
நான் நாடாளுமன்றம் சென்ற போது மைத்திரிபால சிறிசேன கோட்டபாய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஜனாதிபதிகளாக இருந்தனர்.
தற்போது நாட்டின் ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இருக்கிறார். இது நாட்டின் ஜனாதிபதி தேர்தல்.
அது வேறு. இது உள்ளூராட்சி மன்றத் தேர்தல். உள்ளூராட்சி மன்றங்களின் அரசு. நானாட்டான் மக்களினுடைய பிரதேச சபைத் தேர்தல். அவர்கள் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழர்களாகிய நாங்கள் எங்களுடைய அடையாளங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்கு எமது வரலாற்றை நாங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்பதும் எமக்கு காலம் தந்த கடமையாக உள்ளது.
நாட்டில் இடம்பெற்ற ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒப்பிட முடியாது. நாட்டின் ஜனாதிபதியாக அவர் இருக்கட்டும். அது வேறு. இது எங்களுடைய உள்ளூர் அரசு. இது தமிழரசு. இது எமது ஆட்சி. எமது ஆட்சியையும், அடையாளத்தையும் நாங்கள் ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது.
நாங்கள் தமிழர்களுடைய அடையாளத்தை விட்டுக்கொடுக்காது தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டிருக்கிறோம். எனவே நானாட்டான் பிரதேச சபை தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்துடன் செயல்பட வேண்டும். எனவே அனைவரும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.



