ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. அந்தப் போட்டியின் போது, ஹர்ஷா போக்லே மற்றும் சைமன் டவுல் வர்ணனை செய்வதற்காக வந்தால் மைதானத்திற்குள் அனுமதிக்க முடியாது என பெங்கால் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் ஐபிஎல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈடன் கார்டன் மைதானத்தின் பிட்ச் பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜியை விமர்சித்து அவர்கள் இருவரும் பேசியதுதான் இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
2025 ஐபிஎல் தொடரில் துவக்கத்தில் இருந்தே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், ஈடன் கார்டன் மைதானத்தின் பிட்ச் பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருந்தன.
இந்த விவகாரம் குறித்து வர்ணனையின் போது ஹர்ஷா போக்லே மற்றும் சைமன் டவுல் சுஜன் முகர்ஜியை நேரடியாக விமர்சித்திருந்தனர். அது பெங்கால் கிரிக்கெட் சங்கத்தை கோபம் அடைய செய்து இருக்கிறது.
இதுகுறித்து பெங்கால் கிரிக்கெட் சங்கம் பிசிசிஐக்கு அளித்திருந்த விளக்கத்தில், ஐபிஎல் விதிமுறைகளின் படிதான் தாங்கள் பிட்சுகளைத் தயாரித்து வருவதாகவும், எந்த அணிக்கும் பிட்ச் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதற்கான உரிமை இல்லை என விதிமுறைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாகவும் அந்த கடிதத்தில் தெளிவுபடுத்தி உள்ளது.
அதைத்தொடர்ந்து, தற்போது ஹர்ஷா போக்லே மற்றும் சைமன் டவுல் தங்களின் மைதான பிட்ச் பராமரிப்பாளரை விமர்சித்ததால் அவர்களை அனுமதிக்க முடியாது என பிசிசிஐக்குக் கடிதம் எழுதி இருக்கிறது பெங்கால் கிரிக்கெட் சங்கம்.
ஐபிஎல் வரலாற்றிலேயே இந்த ஆண்டில் தான் ஒவ்வொரு அணியும் தங்களின் சொந்த மைதானத்தில் தங்களுக்கு விருப்பமான பிட்ச் உருவாக்கப்படவில்லை என்ற புகாரை முன் வைத்துள்ளனர்.