புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதிகளில் கட்டாக்காலி கால்நடைகளால் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் பெரும் சிரமத்தினை எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதோடு, விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களும் அதிகமாகியுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கட்டாக்காலி கால்நடைகள் மாலை, இரவு வேளைகளில் அதிகம் வீதியிலே நிற்கின்றது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு, விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களும் அதிகமாகியுள்ளது. அத்துடன் கடந்த காலங்களில் கால்நடைகளால் பல்வேறு விபத்து சம்பவங்கள் பதிவாகியிருந்தது.
எனவே குறித்த விடயத்தினை புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் கருத்திற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபையினர், கால்நடை உரிமையாளர்கள் போன்ற பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டு முடிவெடுக்கப்பட்டும் கட்டாக்காலி கால்நடைகள் இதுவரை கட்டுப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.







