புத்தளத்தில் முந்திரி தோட்டம் ஒன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாயு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் சிக்கி 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 8 பேரை வணாத்தவில்லு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வணாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரைத்தீவு பகுதியில் அரங்கேறியுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 38 வயதுடைய அத்துக்கோரளகே பிரதீப் சுசந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்துள்ள ஆரம்பகட்ட விவரங்களின்படி, சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான கரைத்தீவு பகுதியில் அமைந்துள்ள சுமார் 50 ஏக்கர் பரப்பளவுடைய முந்திரி தோட்டம், கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரால் முந்திரி அறுவடை செய்வதற்காகக் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
அந்த முந்திரி தோட்டத்தின் விளைச்சலைப் பாதுகாப்பதற்காகக் குத்தகையாளரால் தனிப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை அந்த முந்திரி தோட்டத்துக்குள் இரகசியமாக நுழைந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரை, அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் வாயு துப்பாக்கி மூலம் சுட்டுள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உடலின் முக்கிய பாகங்களில் கடுமையான காயங்களுக்குள்ளான பிரதீப் சுசந்த, அங்கிருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாகத் துப்பாக்கியைப் பயன்படுத்தியவர் உட்பட இதுவரை 8 சந்தேகநபர்களை வணாத்தவில்லு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவ இடத்துக்குத் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களைப் புத்தளம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வணாத்தவில்லு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










