கலால் வரித் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளின் முறைகேடுகள் மற்றும் ஊழல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இராஜகிரியவில் அமைந்துள்ள அதன் தலைமை அலுவலகத்திற்கு முன்பாகச் சமூக ஆர்வலர்கள் குழுவினர் நேற்று கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தின் போது, சுயதொழில் சங்கத்தின் தலைவரும் சமூக ஆர்வலருமான பிரதீப் சார்ல்ஸ் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், திணைக்களத்தின் தற்போதைய ஆணையாளர் பிரேமரத்ன மற்றும் ‘வி&ஏ’ மதுபான நிறுவனத்தின் உரிமையாளர் வஜிர குணசேகர ஆகியோருக்கு இடையில் இருக்கும் சட்டவிரோத நெருக்கம் குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“கலால் வரி ஆணையாளர் பிரேமரத்ன, அண்மையில் பல மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு ‘வெசல்’ ரக மோட்டார் வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். இதற்கான நிதி அவருக்கு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து, அதன் பின்னாலுள்ள இலஞ்ச ஊழல் விவரங்களுடன் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
சோளத்தைக் கொண்டு சட்டப்படியாகத் தயாரிக்கப்பட வேண்டிய மதுபானங்களை, வஜிர குணசேகரவின் ‘வி&ஏ’ நிறுவனம் அதிக இலாபத்தை நோக்கமாகக் கொண்டு, சர்க்கரையைப் பயன்படுத்தித் தரமற்ற முறையில் தயாரித்து வருகின்றது. இந்த பாரிய மோசடிகளை மூடிமறைக்கவே கலால் வரி ஆணையாளர் அவருக்குத் துணை போகிறார்” என்று குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போதைய நிதி அமைச்சரின் தாயார் மறைந்த போது, அதற்கான ஒட்டுமொத்த இறுதிச்சடங்குச் செலவுகளையும் இந்த மதுபான நிறுவன அதிபர் வஜிர குணசேகரவே ஏற்றுக்கொண்டுள்ளார். இதன் மூலம் அரசின் உயர் மட்டத்தினரையும் இவர்கள் தங்களது பண பலத்தால் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர் என்பது தெளிவாகின்றது.
இந்த ஊழல் வலையமைப்பை அம்பலப்படுத்த, பிரதி நிதி அமைச்சர், கலால் வரி ஆணையாளர் மற்றும் வஜிர குணசேகர ஆகிய மூவரின் தொலைபேசி அழைப்பு விவரங்களை ஜனாதிபதி உடனடியாகப் பெற்று விசாரணை செய்ய வேண்டும்.
இந்த ஒட்டுமொத்த இலஞ்ச ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து இலஞ்ச ஊழல், ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறையான ஆவணங்களுடன் எம்மால் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் பெரிய அளவிலான திட்டங்களைச் செயல்படுத்துவதாகக் கூறி, நாட்டில் உள்ள நடுத்தர மற்றும் சிறு அளவிலான சுயதொழில் வியாபாரிகளின் வயிற்றில் அடிக்கும் செயலில் இந்த ஆணையாளர் ஈடுபட்டு வருகின்றார். தகுதியற்ற நபர்களை இத்தகைய உயர் பதவிகளில் அமர்த்துவதை விடுத்து, திணைக்களத்தில் உள்ள நேர்மையான தகுதியான அதிகாரிகளுக்கு இந்தப் பதவியை வழங்க வேண்டும்.
ஜனாதிபதி இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, இந்த ஊழல்வாதிகளைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அடுத்த கட்டமாகச் கடுமையான முறையில் ‘மரணச் சவப்பெட்டி’ மற்றும் ‘மலர்வளையங்களை’ ஏந்தியவாறான பாரிய போராட்டங்கள் திணைக்களத்துக்கு முன்னால் வெடிக்கும்.” – என்றார்.













