தெற்கு லெபனான் மற்றும் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களை அடுத்து, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை நிறுத்துவதுடன், எதிரியுடன் நேரடியாக மோதவும் ஈரான் தயங்காது என்று அந்த நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மீதும் கடுமையான சாடல்களை முன்வைத்துள்ள அவர், “அவர்கள் போர்நிறுத்த உடன்படிக்கைகளுக்குக் கட்டுப்படவுமில்லை, பேச்சுவார்த்தைகளை நம்பவுமில்லை. லெபனான் மீதான கடல்சார் முற்றுகை மற்றும் உடன்படிக்கை மீறல்கள் மூலம் தங்களுக்கு அதிகாரத்தின் மொழி மட்டுமே புரியும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
காலிபாப், தனது ‘X’ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “ஈரானிய நாட்டிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள கடல்சார் முற்றுகை மற்றும் இன்று இஸ்ரேலிய விசுவாச ஆட்சிக்கு அமெரிக்கா வழங்கியுள்ள பச்சைக்கொடி ஆகியன, இந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ முகாம்களையும் சொத்துக்களையும் தாக்குதலுக்கான நியாயமான இலக்குகளாக மாற்றியுள்ளன.” என குறிப்பிட்டுள்ளார்.
லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தொடர் வான்வழித் தாக்குதல்களுக்கு அமெரிக்கா மறைமுக ஆதரவு வழங்கி வரும் நிலையில், ஈரானிய உயர் மட்டத் தலைவரிடமிருந்து வெளிவந்துள்ள இந்த நேரடி எச்சரிக்கை மத்திய கிழக்கில் போர்ச் சூழலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.










