அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் ஆழமாகவும் விரிவாகவும் வலுப்படுத்துவது குறித்து, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையில் கொழும்பில் விசேட சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் முதன்மைப் பிரதி உதவிச் செயலாளர் நிகோல் சூலிக் மற்றும் தூதரக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் ஜேன் ஹொவெல் ஆகியோர் கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் அமைச்சர் விஜித ஹேரத்தை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பல தசாப்த கால நீண்டகால நட்புறவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது குறித்து இச்சந்திப்பில் இருதரப்பும் விருப்பம் தெரிவித்தன.
குறிப்பாக, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த பாதுகாப்புத் தன்மையைப் பேணுவதில் இருதரப்பும் இணைந்து செயல்படக்கூடிய மூலோபாய வழிமுறைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதுடன், வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் இருதரப்பு மேம்பட்ட ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகள் குறித்துப் பேசப்பட்டது. அத்துடன், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நலன்சார்ந்த பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த ஏனைய விடயங்கள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜதந்திர முக்கியத்துவம்
இலங்கையின் தற்போதைய புதிய அரசின் கீழ், பிராந்திய இராஜதந்திர சமநிலையைப் பேணுவதிலும் அமெரிக்காவுடனான பொருளாதார மற்றும் பாதுகாப்புப் பங்களிப்பைத் தொடர்வதிலும் இந்த உயர்மட்ட அமெரிக்கக் குழுவின் விஜயம் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகின்றது.












