தலைக்கவசம் அணியாமல் உந்துருளியில் பயணித்த போது காவல்துறையினரின் சமிக்ஞையை மதிக்காமல் தப்பியோடி, வீட்டில் மறைந்திருந்த நபர் மற்றும் வீட்டின் உரிமையாளர் ஆகியோர் இன்று மே 5 ஆம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மொரட்டுமுல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மொரட்டுமுல்ல காவல்துறையினர் இரவு நேர உந்துருளி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, தலைக்கவசம் அணியாமல் சென்ற உந்துருளி ஒன்றை நிறுத்துமாறு சமிக்ஞை வழங்கியுள்ளனர். எனினும், ஓட்டுநர் அதனைப் பொருட்படுத்தாமல் சென்றுள்ளார்.
காவல்துறையினர் அவரைப் பின்தொடர்ந்து நிறுத்துமாறு பலமுறை அறிவுறுத்தியும், அதனைக் கண்டுகொள்ளாத ஓட்டுநர் காவல்துறையினரைப் பகிங்கரமாகத் திட்டியவாறு மொரட்டுமுல்ல வில்லோராவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் சென்று மறைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறை கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளின் உதவியுடன் சந்தேகநபரை வீட்டை விட்டு வெளியே கொண்டுவர காவல்துறையினர் முயன்றுள்ளனர். அந்தச் சந்தர்ப்பத்தில், சந்தேகநபரும் வீட்டின் உரிமையாளரும் இணைந்து காவல்துறையினரின் கடமைக்குத் தடையாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, காவல்துறையினர் குறைந்தபட்ச பலத்தைப் பயன்படுத்தி இருவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மொரட்டுமுல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.










