ஒற்றுமையெனும் விடயத்தில் ஏனைய கட்சிகளை விட தமிழ்த் தேசியக் கட்சிகள் பலமாகவுள்ளதாகவும் சமஸ்டி அடிப்படையிலான தீர்வுதான் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் என்பதை கஜேந்திரகுமார் உட்பட அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒற்றுமையாக ஒரு ஆவணத்தினை வழங்க முடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
ஒற்றுமையெனும் விடயத்தில் சிங்கள கட்சிகளைவிட தமிழ்த் தேசியக் கட்சிகள் பலமாகவுள்ளதாகவும் ஒற்றுமையெனும் விடயத்தில் பிரிவினையினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் சில சுயநலவாதிகள் மட்டுமே தமிழர்களுக்குள் ஒற்றுமையில்லை என கூறி தமிழ் மக்களுக்குள் பிரிவினையை காட்ட முடினைவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவராக தந்தை செல்வாவின் 128வது ஜனன தினம் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மண்முனை வடக்கு கிளையின் தலைவரும் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வருமான சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார், தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை தலைவர் க.சோபனன், மகளிர் அணியின் உபதலைவியும் மாநகரசபை உறுப்பினருமான த.கௌரி உட்பட பிரதேச சபையின் தவிசாளர்கள், மாநகர சபையின் உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வா தி.சரவணபவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் விசேடமாக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ந.புஸ்பராசாவினால் தந்தை செல்வா தொடர்பிலான சிறப்புரை நிகழ்த்தப்பட்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரையும் இடம்பெற்றது.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,
தந்தை செல்வா காலத்தில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்பட்ட பலர் இன்னும் இந்த மாவட்டத்தில் இருக்கின்றார்கள். தமிழரசுக் கட்சியில் எனது பாட்டனார் சீ.மு.இராசமாணிக்கம் ஐயா அவர்கள் தலைவராகயிருக்கும்போது தந்தை செல்வா இந்த மாவட்டத்திற்கு தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டபோது இராசமாணிக்கம் ஐயா தேர்தல் பரப்புரைக்கு போகக் கூடாது எனவும் அவர்களுக்கு செருப்புமாலை போடவேண்டும் எனவும் பேசியவர்கள் எல்லாம் இன்று இந்த மாவட்டத்தில் தமிழ் தேசியவாதிகளாக பலரால் காட்டப்படுகின்றார்கள்.
ஆனால் உண்மையில் இலங்கை தமிழரசுக் கட்சியில் அந்தக்காலம் தொடக்கம் இந்த காலம் வரையில் தமிழரசுக் கட்சியையும் வளர்த்து இளைஞர் பேரவையுடன் இருந்தவர்களை கேட்டால் தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்பதை எதற்காக சொன்னார் என்று அவர்களிடம் கேட்டால் தெரியும்.
நாங்கள் எமது நிலத்தை பாதுகாப்பது என்றால் ஒரு அரசியலமைப்பின் ஊடாக அதிகாரம் தமிழ் மக்களின் கைகளில் இருந்தால் மாத்திரம்தான் எமது நிலத்தினை நாங்கள் பாதுகாக்க முடியும். இல்லாதுவிட்டால் எங்காவது காணிகளை பாதுகாக்க ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தே தடுக்கவேண்டிய நிலையிருக்கின்றது.
நாங்கள் பொருளாதாரத்தினால் பலமடையும்போதே எமது இளைஞர்களை இங்கு தக்கவைக்க முடியும். இன்று இந்த நாட்டில் இளைஞர்கள் வாழக்கூடிய சூழ்நிலையில்லை. இன்று மின்சார கட்டணம் அதிகரிக்கின்றது, உலக சந்தையில் ஏற்பட்ட நெருக்கடி நிலையில் இன்று எரிபொருள் விலை அதிகரித்திருக்கின்றது. பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுகின்ற போதிலும் அதற்கு நிகராக சம்பளம் அதிகரிக்குமா என்பதே சந்தேகமே.
நாங்கள் மாகாண சபை தேர்தலை தொடர்ந்து வலியுறுத்தி வருவதற்கான முக்கிய காரணம். மாகாண சபை தேர்தல் நடைபெற்றால் ஆளுநரின் ஆளுகைக்குள் இல்லாமல் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களின் கீழ் மாகாண சபை இருக்கும். உள்ளூராட்சி மன்றங்களை இயங்க வைப்பதற்கு ஆளுநரோ மாகாண சபையோ தடையாக இருக்காது. அதற்காகவே மாகாணசபை தேர்தலை நடாத்துமாறு கோருகின்றோம்.
உடனடியாக பறிக்க கூடிய பழமாக மாகாண சபையும் ஏணிவைத்து ஏறி நாங்கள் பறிக்ககூடிய பழமாக புதிய அரசியலமைப்பு இருக்கும். அதனை நாங்கள் முன்னெடுப்போம். மண்ணையும் மக்களையும் பாதுகாப்பதாக இருந்தால் நாங்கள் எங்களது நீண்டகால இலக்கான புதிய அரசியலமைப்பினை அடைந்தால் மாத்திரம்தான் அதனை செய்யமுடியும்.
ஒற்றுமையை பற்றி பேசும்போது இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலானவர்கள் உறுதியாகயிருந்தார்கள். வட்டாரங்களில் பங்காளிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்காத நிலைமைகள் காணப்பட்டன. தவிசாளர், பிரதி தவிசாளர்கள் பங்காளிக் கட்சிக்கு விட்டுக்கொடுக்க முடியாத நிலைமைகள் காணப்பட்டன. பிரிந்துகேட்டபோதும் வடக்கில் பல இடங்களில் இணைந்து ஆட்சியமைத்தோம்.
இன்று ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று கூறுகின்ற சிலர் மறுபுறத்தல் இவர்தான் ஒட்டுக்குழுக்களை இணைக்கின்றார். இவர்தான் மீண்டும் ஒட்டுக் குழுக்களுடன் பயணிக்கப் பார்க்கின்றார் என்று கூறிவருகின்றனர். தங்களுக்கு தங்களுக்கு தேவை வரும் போது சேர்ந்து இயங்க வேண்டும், தங்களுக்கு தேவையில்லாத போது சேர்ந்து செயற்படக்கூடாது.


















