கட்டார் வெளியுறவு அமைச்சகம், ஈரான் தூதரகத்துடன் தொடர்புடைய சில அதிகாரிகளை “விரும்பத்தகாத நபர்கள்” என அறிவித்து, 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கையில், இராணுவ அதிகாரி, பாதுகாப்பு பொறுப்பாளர் மற்றும் இரு தூதரக பணியாளர்கள் அடங்குகின்றனர்.
இந்த அறிவிப்பு, வெளியுறவு அமைச்சக இயக்குநர் இப்ராஹிம் யூசிஃப் ஃபக்ரோ மற்றும் ஈரான் தூதர் அலி சலேஹாபாதி இடையே நடைபெற்ற சந்திப்பின் போது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
கட்டார் வெளியுறவு அமைச்சகத்தின் விளக்கத்தின் படி, சர்வதேச சட்டக் கோட்பாடுகள் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானங்களை மீறி, கட்டாரின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் ஈரான் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குப் பதிலடியாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய விரோத நடவடிக்கைகள் தொடர்ந்தால், தனது தேசிய பாதுகாப்பு மற்றும் நலன்களைப் பாதுகாக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கட்டார் எச்சரித்துள்ளது.










