“மயிலிட்டி என்பது வரலாற்று முக்கியமான மீன்பிடித் துறைமுகமாகும். நாட்டில் இரண்டாவது இடத்தில் இருந்த இந்த மீன்பிடித் துறைமுகம் காணப்பட்டது. கடந்த 30 வருடங்களாக காணப்பட்ட நிலைமை காரணமாக இந்தத் துறைமுக நடவடிக்கைகள் செயலிழந்து காணப்பட்டன. இந்தப் பிரதேசத்தில் காணி, மீனவர்களின் கடல்வளம் பகிர்வதில் உள்ள முரண்பாடு என பிரச்சினைகள் காணப்பட்டன. எமது மீனவர்கள் சட்டவிரோதமான மீன்பிடி முறைகளை கடைபிடிக்கும் நிலைமையும் காணப்பட்டது. எமது அரசாங்கம் இந்த அனைத்து நிலைமைகளையும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து துறைமுகத்தையும், கடற்றுறையையும் சீரான திசையை நோக்கி கொண்டு செல்ல எதிர்பார்க்கின்றது” என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இன்று (01) யாழ்ப்பாணத்தில், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்விலே இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,”இந்தத் துறைமுகத்தை முன்னேற்றகரமான துறைமுகமாக மாற்ற வேண்டும். உளக்காயங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்பினால் அன்றி வேறு எதனாலும் திருப்திப்படுத்த முடியாது.
எந்த அபிவிருத்தி மேற்கொண்டாலும், காணி விடுவித்தாலும், பாதைகளை திறந்தபோதும் அவர்களின் 30 வருட கால கசப்பான அனுபவங்களை போக்க வேண்டும் என்பது ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.
3 ஆம் கட்ட பணிகளை ஆரம்பித்து பூரண துறைமுகமாக இதனை மாற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படுகிறது. இந்தத் துறைமுகம் உங்களுடையது. இதனை நீங்கள்தான் காக்க வேண்டும்.
எமக்கு தொல்லை கொடுத்து வரும் இந்தியப் படகுகளை அகற்றவும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான படகுகள் எமது நாட்டில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளன. ஆழ்கடல் மீன்பிடித்துறை ஊடாக கடற்றொழிலை மேம்படுத்த வேண்டும். அதற்கான உதவிகளை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது” எனத் தெரிவித்தார்.










