கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதமானது வவுனியாவில் பட்டாரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து சென்ற புகையிரம் இன்று (01) மாலை 3.30 மணியளவில் வவுனியா – மன்னார் வீதி புகையிரதக் கடவையை கடக்க முற்பட்டபோது மன்னார் வீதி ஊடாக வவுனியா நோக்கி வந்த பட்டாரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
குறித்த விபத்தில் பட்டாரக வாகனம் புகையிரதத்துடன் மோதி தூக்கி வீசப்பட்ட நிலையில் அதில் பயணித்த தாய், தந்தை, மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக குறித்த வீதிப் பகுதியில் சுமார் அரைமணி நேரத்திறகும் மேலாக புகையிரதம் தரித்து நின்றமையால் வவுனியா – மன்னார் வீதிப் போக்குவரத்துக்கள் பாதிப்படைந்தன.
குறித்த புகையிரதக் கடவைக்கு புகையிரத ஒலிச் சமிக்ஞை கிடைக்கப் பெறாமையால், புகையிரதக் கடவை மூடப்பட்டிருக்கவில்லை எனவும் இதன் காரணமாகவே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.












