ஓவியம் வரைதல் ஊடாக கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் முகமாக யாழ்ப்பாண மாவட்ட மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயற்றிட்டம் இன்றைய தினம் (16.08.2025 ) யாழ்.இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
“நான் விரும்பும் இலங்கை நாடு”, “வீதி விபத்துக்கள்” ஆகிய தலைப்புகளில் இந்த விழிப்புணர்வு இடம்பெற்றன.
தொடர்ந்து, “நான் விரும்பும் இலங்கை நாடு” எனும் தலைப்பில், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சாரதாஞ்சலி மனோகரன் மாணவர்களுக்கு கருத்துக்களை வழங்கியதுடன், “வீதி விபத்து” எனும் தலைப்பில், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து பொலிஸ் தலைமையக உதவிப் பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஜேசுதாசன் மாணவர்களுக்கு கருத்துக்களை வழங்கினாா்.
மேலும் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் “நான் விரும்பும் இலங்கை நாடு”, “வீதி விபத்துக்கள்” ஆகிய தலைப்புகளில் ஓவியப் போட்டிகள் இடம்பெற்று ஓவியப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசில்கள், மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து யாழ்.இந்து மகளிர் பாடசாலை மைதானத்தில் மரக்கன்றுகள் நடுகை செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து 20 பாடசலைகளிலிருந்து 250 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், கிளீன் ஸ்ரீலங்கா செயலணியின் பணிப்பாளர் டுலிப் சோமரத்ன, ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சாரதாஞ்சலி மனோகரன், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன், ஜனாதிபதி செயலகத்தின் தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் உதவிப் பணிப்பாளர் (ஊடகம்) நிசாந்த அல்விஸ், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து பொலிஸ் தலைமையக உதவிப் பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஜேசுதாசன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.














