“அரசுக்குள் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பது அரசைப் பலப்படுத்துவதாகவே அமையும். எனவே, பிரதான எதிர்க்கட்சி பொறுப்புடன் செயற்பட வேண்டும்.” – இவ்வாறு சர்வஜன அதிகாரத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர, கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக இருந்த காலப் பகுதியில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தை மையப்படுத்தியே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் சூழ்ச்சி இல்லை, பிரதான சூத்திரதாரி இல்லை என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம்.
பிரதிப் பாதுகாப்பு அமைச்சராகச் செயற்பட்ட காலத்தில் அல்ல, இராணுவத்தில் அவர் செயற்பட்ட காலப் பகுதியை மையப்படுத்தியதாக பிரேரணை வருவதால் அது ஒட்டுமொத்த இராணுவத்தின் புகழுக்கும் களங்கம் ஏற்படும்.
அதேவேளை, அரசுக்குள் பிளவு உள்ளது என்ற கருத்து நிலவுகின்றது. இந்நிலை அவ்வாறு இல்லை என்பதை இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை உறுதிப்படுத்திவிடும். ஆளுங்கட்சியினர் இணைந்து அந்தப் பிரேரணையைத் தோற்கடித்து விடுவார்கள்.” – என்றார்.










