தமிழக சட்ட சபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள சூழ்நிலையில் முதன் முறையாக தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது.
அந்த வகையில் வரும் 25 ஆம் திகதி மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பாரபத்தி பகுதியில் 2 ஆவது மாநில மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்புக் காரணங்களுக்காக காவல்துறை கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் மாநாடு 4 நாட்களுக்கு முன்னதாக 21 ஆம் திகதி நடைபெறும் என்று த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்தார்.
த.வெ.க. மாநாட்டிற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தென் மாவட்டங்களில் விஜய் பலத்தை நிரூபிக்க நடத்தப்படும் த.வெ.க. 2 ஆவது மாநில மாநாடு, அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மதுரையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆவது மாநில மாநாட்டு பணிகளுக்காக மேலும் 5 குழுக்கள் அமைத்துள்ளதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.










