மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலாவது ஆட்டத்தில் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவும், 2 ஆவது ஆட்டத்தில் 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றன.
இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் 3 ஆவது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கெய்ன்ஸ் நகரில் இன்று (16) நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் நேற்று (15) தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
முதல் ஆட்டத்தில் டிம் டேவிட்டின் அதிரடி அரைசதமும், ஹேசில்வுட், பென் துவார்ஷூயிஸ் ஆகியோரது அபார பந்து வீச்சும் (தலா 3 விக்கெட்) ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியை தேடித் தந்தன. அடுத்த ஆட்டத்தில் டிவால்ட் பிரேவிசின் மின்னல் வேக சதத்தின் (56 பந்தில் 125 ஓட்டங்கள்) மூலம் தென்னாப்பிரிக்கா பதிலடி கொடுத்தது.
ஆஸ்திரேலிய அணியில் இரு ஆட்டத்திலும் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட், கேப்டன் மிட்செல் மார்ஷ் சரியாக ஆடாதது பின்னடைவாகும். தவறுகளை திருத்திக் கொண்டு இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஓட்டங்கள் திரட்ட முயற்சிப்பார்கள். உடல் நலக்குறைவால் முன்னைய ஆட்டத்தில் ஓய்வில் இருந்த விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் அணிக்கு திரும்புகிறார்.
தென்னாப்பிரிக்க அணி 2 ஆவது ஆட்டத்தில் கிடைத்த வெற்றி உத்வேகத்துடன் தொடரை கைப்பற்ற வரிந்து கட்டுகிறது. இதனால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.
கெய்ன்ஸ் ஸ்டேடியத்தில் சர்வதேச 20 ஓவர் போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும். ஒரு நாள் போட்டி நடந்து கூட 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் இதன் ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பதை கணிப்பது கடினம். இருப்பினும் இங்கு நடந்த பிக்பாஷ் 20 ஓவர் போட்டிகளின் போது ஓரளவு சுழற்பந்து வீச்சு எடுபட்டதால் இரு அணியினரும் சுழலுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று பிற்பகல் 2.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.










