உக்ரைன், ரஷ்யா இடையிலான போரானது மூன்று ஆண்டுகளை கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் மேற்கொண்டு வருகிறார்.
இதையடுத்து, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புடின் நேற்று (15) நேரில் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கிடையே, அமெரிக்காவில் அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதிக்கு அதிபர் ட்ரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் வந்து சேர்ந்தனர். அங்கு அதிபர் புடினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய அதிபர் புடினை, ட்ரம்ப் கைகுலுக்கி வரவேற்றார். அதன்பின், இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் இந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. ட்ரம்ப் மற்றும் புடின் இடையேயான போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தை முடிந்தது.
இந்நிலையில், இரு நாட்டு அதிபர்களும் கூட்டாகச் ஊடகவியலாளர்களை சந்தித்தனர். அப்போது அதிபர் புடின் கூறியதாவது, “எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.
நானும், ட்ரம்பும் வெளிப்படையாக பேசினோம். ட்ரம்ப் அதிபராக இருந்திருந்தால் போர் தொடங்கியிருக்காது எனக் கூறியிருந்தார். அது உண்மைதான். ட்ரம்பிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எங்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகின்றேன்.
உக்ரைனில் காணப்படும் சூழ்நிலை எங்களுடைய பாதுகாப்புக்கு அடிப்படையில் ஓர் அச்சுறுத்தலாக உள்ளது.
அதேவேளை, நீண்டகாலத் தீர்வை உருவாக்குவதற்காக, போருக்கான முதன்மை விளைவுகள் எல்லாவற்றையும் நாம் நீக்க வேண்டிய தேவை உள்ளது என எங்களிடம் கூறப்பட்டது.
உக்ரைனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என ட்ரம்ப் கூறியதற்கு உடன்படுகிறேன்.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே நல்ல பொருளாதார உறவு உருவாகி உள்ளது எனத் தெரிவித்தார். அடுத்த சுற்று பேச்சுவார்த்தை மாஸ்கோவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.










