உக்ரைன், ரஷ்யா இடையிலான போரானது மூன்று ஆண்டுகளை கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் ட்ரம்ப் பேசினார்.
இதையடுத்து, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புடின் நேரில் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சந்திப்பில் உக்ரைன் அமைதி ஒப்பந்தம் பற்றி இருவரும் ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, அமெரிக்காவில் அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதிக்கு, அதிபர் ட்ரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் தனித்தனியாக விமானத்தில் வந்து சேர்ந்தனர். அங்கு புடினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய அதிபர் புடினை, ட்ரம்ப் கைகுலுக்கி வரவேற்றார். இதன்பின், இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக, அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதியின் பல்வேறு இடங்களிலும் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. அதில், ரஷ்யா இனி இருக்காது என்றும், உக்ரைனுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் காணப்பட்டது. இந்த சுவரொட்டியால் அலாஸ்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.










