“இலங்கை தமிழரசுக் கட்சியால் எதிர்வரும் திங்கட்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவினை வழங்க முடியாதென வவுனியா வர்த்தகர் சங்கத்தின் நிர்வாக சபை எடுத்த தீர்மானத்தை எண்ணி மனக்கவலை அடைந்துள்ளேன். குறித்த முடிவு சங்கத்தின் ஜனநாயக ரீதியான கூட்டு முடிவு என்பதற்கப்பால் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் என்றவகையில் ஒரு பணிவான வேண்டுகோளை வர்த்தகர் சங்கத்திற்கு முன்வைக்கின்றேன்” என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார்.
கடந்த பல வருடங்களாக தமிழ் மக்கள் தங்களது சுதந்திரமான வாழ்தலுக்கான உரிமைப் போராட்டத்தில் பல இழப்புக்களை சந்தித்துள்ளனர்.
போர் முடிவுற்றபோதும் எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருகின்றமை நீங்கள் அறிந்ததே. அந்த நிலையில் எம் மக்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற அனைத்து போராட்டங்களிலும் வவுனியா வர்த்தகர் சமூகம் தனது முழுமையான பங்களிப்பினை வழங்கியிருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை.
தீர்க்கமான, நெருக்கடியான தருணங்களிலும் கூட தமிழ்த் தேசிய மக்களின் அறவழிப் போராட்டங்களுக்கு எந்தவித தடங்கல்களும் இல்லாமல் அவர்களது போராட்டம் வெற்றி பெறுவதை முன்னிறுத்தி வர்த்தகர் சமூகம் நல்ல முடிவுகளை எடுத்திருக்கின்றது.
இந்தக் ஹர்த்தால் போராட்டமானது ஒரு அரசியல் கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்டாலும் அது தமிழ்த் தேசிய மக்களின் அடிப்படை உரிமைகளையும், பிரச்சினைகளையும் மையப்படுத்தியிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
எனவே நீங்கள் எடுத்துள்ள இந்த முடிவு தமிழ் மக்களின் நீண்டகால நீதிக்கான காத்திருப்பில் ஒரு அவப்பெயரையோ அல்லது வரலாற்றுத் தவறையோ ஏற்படுத்தி விடக்கூடாது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும் என்பது எனது நிலைப்பாடு.
அந்தவகையில் கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் சுதந்திரமான வாழ்வுரிமையை முன்னிறுத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹர்த்தால் போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என்ற வர்த்தகர் சங்கத்தின் முடிவினை மறுபரிசீலணை செய்யவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.










