“தோல்வியில் முடிந்த தமிழ் மக்களது போராட்டத்திலிருந்து மீண்டு வரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது” என சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம்
எதிர்வரும் 18 ஆம் திகதியன்று வலிந்து அழைக்கப்பட்டுள்ள ஹர்த்தாலை சைவர்களும், தமிழ் மக்களும் புறக்கணிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறிய சச்சிதானந்தம் மேலும் கூறுகையில், “தற்போது அழைப்பு விடுக்கப்பட்ட கடையடைப்பு போராட்டம் என்பது கடைந்தெடுத்த கயவர்கள் விடுத்துள்ள அழைப்பு. இதை சைவர்கள் குதிப்பாக தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.
கடை அடைப்புக்கான தேவை இன்றைய சூழலுக்கு தேவையற்ற ஒன்று. அத்துடன் கடை அடைப்புக்கு என்பது காலத்துக்கும் ஒவ்வாத போராட்டம்.
முல்லைத்தீவில் இளைஞன் இறந்த சம்பவத்திற்கு அது தொடர்பில் குற்றம் சாட்டபட்டவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்கு நடந்த சம்பவத்திற்கு காரணம் கஞ்சா குடித்து போதையில் நீரில் வீழ்ந்து இறந்ததே என மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நேரம் இராணுவ பிரசன்னம் என்பது தோல்வி அடைந்த இனம் சந்திக்கும் ஒரு இயல்பான தாக்கம் அல்லது அடக்கு முறைதான்.
மடு மாதாவின் நலன் கருதி போராட்டத்தை பின்நகர்த்திய குறித்த தரப்பினர் நல்லூர் திருவிழாவை குறிவைத்து கடை அடைப்பு எனக் கூறி சுயநல அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதால் நாளாந்தம் உழைத்து வாழும் மக்களின் வாழ்வே பாதிக்கும்.
அந்தவகையில் ஏழை மக்களை பகடைக்காயாக்க முயற்சிக்கும் நரித்தன அரசியலுக்கு இடம்கொடுக்கக்கூடாது.
இந்தக் கடை அடைப்பு போராட்டத்திற்கு வர்த்தகர்களோ, போக்குவரத்துசார் சங்கங்களோ, பொது அமைப்புகளோ எதுவானாலும் ஒத்துழைப்பு வழங்கக்கூடாது.
தோல்வியில் முடிந்த போராட்டத்திலிருந்து மீண்டு வரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் காலத்தில் இந்தப் போராட்டங்கள் அவசியமற்றது” எனவும் அவர் தெரிவித்தார்.










