அண்மையில் முடிவடைந்த 18 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சம்பியன் பட்டத்தை தட்டித் தூக்கியது.
முதல் முறையாக கோப்பையை கைப்பற்றிய ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்.சி.பி.) அணியினருக்கு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடந்தது. இந்நிலையில், கப்டனாக ரஜத் படிதார் வெற்றிக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை என்று ஆர்.சி.பி அணிக்காக விளையாடும் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, “ஆர்.சி.பி என்னை அல்லது விராட் கோலி உட்பட யாரை வாங்கினாலும் அவர்கள் தங்களுடைய சொந்த நட்பை தாண்டி களத்தில் அணிக்காக நன்றாக விளையாட வேண்டும். களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். இம்முறை ஆர்.சி.பி அணி அனுபவமிக்கதாக இருந்தது வெற்றியின் சிறந்த பகுதியாகும்.
ரஜத் அதிகமாக செய்வதற்கு எதுவுமில்லை. அவர் தயக்கமின்றி முடிவுகளை எடுத்தார். எப்போது முடிவுகளை மாற்ற வேண்டும், எப்போது அப்படியே விட வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருப்பதில் அவருடைய தரம் சிறந்தது.
இம்முறை ஆர்.சி.பி அணியில் மிகப்பெரிய வித்தியாசம் என்னவெனில் லெவனில் இருந்த வீரர்கள் அனைவருமே வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு போட்டிகளை வென்று கொடுத்தனர்.










