காரைதீவு பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு 14/08/2025 அன்று பிரதேச சபையின் தவிசாளர் சு.பாஸ்கரனின் தலைமையில் சபை உறுப்பினர்களுடனும் இடம்பெற்றது.
இறைவணக்கத்தை தொடர்ந்து தமிழில் ஒலிபரப்பப்பட்ட தேசிய கீதத்துடனும் ஆரம்பிக்கப்பட்ட இவ் அமர்வில் தவிசாளரினால் முல்லைத்தீவு மாவட்டம் கரடியனாறு பொலிஸ் பிரிவு இராணுவத்தினரால் தாக்கப்பட்டு காணாமல் போன நிலையில் முத்தையன் கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் கபில்ராஜுக்கு மௌன அஞ்சலி ஏற்பாட்டினையும் சபையில் முன்னெடுத்து நிகழ்த்தினார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், வடகிழக்குப் பகுதிகளில் வாழ்கின்ற சிறுபான்மை தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், இவ்வாறான இராணுவத்தினரின் மிலேச்சத்தனமான செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந் நல்லாட்சி அரசாங்கத்திலே நீதியான தீர்வு வழங்க வேண்டியது உங்களது பொறுப்பு எனவும் கேட்டுக்கொண்டதுடன், இவ்வாறான கெடுபிடிகளுக்கு எதிராக எமது தமிழரசு கட்சியினரால் எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தால் நிகழ்விற்கு இச்சபையில் எம்முடன் இணைந்து பயணிக்கும் கட்சியினரும் ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் காரைதீவின் பொதுமக்கள் சார்பாகவும் கட்சியினரின் முன்னெடுப்பிற்கு அமைவாக ஹர்த்தால் நிகழ்விற்கு பூரணமான ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் தெரிவித்தார்.











