சமூக நிறுவனம் ஒன்றின் மூலம் துவிச்சக்கர வண்டிகளை குறைந்த விலையில் பெற்றுத் தருவதாக ஒருவர் தன்னை கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரன் என அடையாளம் காண்பித்து ஏமாற்றியதாக பாதிக்கப்பட்ட நபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சமூக நிறுவனம் ஒன்றிடம் குறைந்த விலையில் துவிச்சக்கரவண்டிகள் இருப்பதாக சுமார் 90 ஆயிரம் ரூபாய் வரை பெற்று மோசடி செய்துள்ளார்.
தன்னை சண்டிலிப்பாய் பிரதேச கிராம சேவையாளர் ஒருவரின் தம்பி என அறிமுகப்படுத்தியே குறித்த நிதி சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
குறித்த விடயம் தொடர்பில் சண்டிலிப்பாய் பிரதேச உதவிப் பிரதேச செயலரை தொடர்பு கொண்டு கேட்டபோது, “இவ்வாறான குற்றச்சாட்டு ஒன்று கிடைக்கப்பெற்றது. சம்பந்தப்பட்ட கிராம சேவையாளரை அழைத்து குறித்த விடயம் தொடர்பில் விசாரிக்கப்பட்டது.
குற்றச்சாட்டை தந்தவர் கிராம சேவையாளர் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டதாக கூறவில்லை. அவரது பெயரை பயன்படுத்தி அவரது சகோதரனே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
கிராம சேவையாளரிடம் குறித்த விவகாரம் தொடர்பில் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரை பொலிஸ் நிலையம் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.











