ஜனாதிபதியின் ஜேர்மன் விஜயம் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான நெடியவனைச் சந்திப்பதற்கே என பிவிதுரு ஹெல உறுமய கட்சித் தலைவர், உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை கட்சி தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை (28) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜேர்மன் விஜயத்தின் போது ஜனாதிபதி ஜேர்மன் அரசாங்க தலைவரான சான்சிலரை சந்திக்கவில்லை என்ற உண்மையை நாட்டுக்கு வெளியிடுமாறு நாம் ஊடகவியலாளர் மாநாடொன்றில் தெரிவித்திருந்தோம். இருப்பினும், தேசிய மக்கள் சக்தியின் பௌத்த பிக்குகள் கூட்டமைப்பு இனவாதத்தை தூண்டுவதாக எனக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்தனர்.
அத்தோடு என்னை கைது செய்யுமாறும் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். ஆனால் நீதிமன்றம் சுயாதீனமாக நடந்து கொண்டது.
ஜனாதிபதி ஜேர்மன் சான்சிலரை சந்திக்கவில்லை. அவர் ஏன் சந்திக்கவில்லை என்பதை நாட்டுக்குக் கூறுவது ஜனாதிபதியின் கடமையாகும் இதனால் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் அரசாங்கத்தின் அதிகாரம் சான்சிலரிடமே உள்ளது. அவர்தான் முடிவுகளை எடுப்பவர். அவரைச் சந்திக்காமல் ஜேர்மனிக்கு விஜயம் செய்வது பணத்தை வீணடிப்பதாகும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2023 இல் ஜேர்மனிக்கு விஜயம் செய்தபோது சான்சிலரை சந்தித்தார்.
இன்று ஜனாதிபதிக்கு விதிவிலக்கு இருந்தாலும், ஜனாதிபதி பதவியை இழந்த பிறகு பொது நிதியை வீணடிப்பது தொடர்பான ஊழல் வழக்கில் குற்றம் சுமத்தப்படலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.










