யாழ். வடமராட்சி – பருத்தித்துறை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் யாழ் மாவட்ட மீனவர்களின் வலைகள் அழிக்கப்பட்டு வருவதாக கடற்றொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக பருத்தித்துறை கடற்பரப்பில் கடந்த சில தினங்களாக எல்லை தாண்டி இந்திய மீனவர்களது இழுவைமடிப் படகுகளின் மீன்பிடி அதிகரித்துள்ளது.
இதனால் நாளாந்தம் அவர்களின் வலைகள் அறுத்தழிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் இழுவைப் படகுகளால் அறுத்தழிக்கப்படுவதுடன் வலைகள் காணாமல் போவதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்றிரவும் (27) இந்திய மீனவர்களது இழுவைப் படகுகளின் எல்லை தாண்டிய மீன்பிடியால் பருத்தித்துறைப் பகுதி கடற்றொழிலாளர்களது வலைகள் அழிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உள்ளூரில் சட்டவிரோத மீன்பிடியான சுருக்குவலைத் தொழில் நடவடிக்கையால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கட்டுப்படுத்த மீன்பிடி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மீனவர்களின் அத்துமீறலையும் தடுத்து நிறுத்த வேண்டும் என கடற்றொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.











