முல்லைத்தீவு மாவட்டத்திற்கு குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்து சேவையை உடனடியாக ஏற்படுத்த வேண்டுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு, அமைச்சின் அடுத்த ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் ஆய்வு அறிக்கைகளை தம்மிடம் கையளிக்கவேண்டுமென அமைச்சர் விமல் ரத்நாயக்கவால் இதன்போது அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் இன்று (22) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. இக்கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் இவ்வாறு வலியுறுத்தியிருந்த நிலையில், அமைச்சர் மேற்கண்டவாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.
இதன்போது நாடளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களில் முல்லைத்தீவு மாவட்டத்திற்குத்தான் குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்து சேவை இல்லை. ஏன் இவ்வாறு பாரபட்சம் காட்டப்படுகின்றதோ தெரியவில்லை.
கடந்த ஆட்சிக்காலங்களிலிருந்து தொடர்ச்சியாக இந்த விடயத்தில் இவ்வாறு பாரபட்சம் காட்டப்பட்டு வந்தநிலையே இருந்தது. இந்த அரசாங்கம் அந்த நிலையை மாற்றியமைக்கின்ற வகையில் செயற்படவேண்டும்.
இவ்வாறான சூழலில் வெளிமாவட்டங்களிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தந்து பணியாற்றுகின்ற வைத்தியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்து சேவை இன்மையால் பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுப்பதாக எம்மிடம் முறையிடுகின்றனர்.
இதனால் வெளியிடங்களிலிருந்து எமது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தந்து சேவையாற்றுவதை வைத்தியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அதிகம் நாட்டம் கொள்ளாத நிலை காணப்படுகின்றது. இந்த நிலைமைகளில் மாற்றம் ஏற்படவேண்டுமெனில் கட்டாயமாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்து சேவையை கட்டாயம் ஏற்படுத்தவேண்டும்.
அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்து சேவையினை ஆரம்பிப்பது தொடர்பிலே முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டு அத்தீர்மானம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தீர்மானத்திற்கு அமைச்சினால் எந்தப் பதிலும் இதுவரை வழங்கப்படவில்லை” என்றார்.
குறித்த முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவினால் அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானத்திற்குரிய பதிலை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் வழங்குவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் அதிகாரிகளால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு, எதிர்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் குறித்த ஆய்வறிக்கைகளை தம்மிடம் கையளிக்கவேண்டுமென அமைச்சின் அதிகாரிகளுக்கு அமைச்சர் விமல் ரத்நாயக்கவால் அறிவுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.










