14 ஆவது வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் 86 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர்.
வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணிக்கும், கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணிக்குமிடையிலான 14 ஆவது நீலங்களின் சமர் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று (18) ஆரம்பமாகியிருந்தது.
நேற்றைய முதல் நாள் போட்டியில் முதல் இன்னிங்சில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி 134 ஓட்டங்களை பெற்றிருந்தனர். கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி முதல் இனிங்சில் 122 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.
இரண்டாவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி 169 ஓட்டங்களை பெற்றிருந்தனர். கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணிக்கு வெற்றி இலக்காக 182 ஓட்டங்கள் நிர்ணயிக்க துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி 48.03 பந்துப் பரிமாற்றங்களில் 95 ஓட்டங்களைப் பெற்றவேளை அனைத்து இலக்குகளையும் இழந்தனர்.
கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி 86 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர். இதுவரை நடைபெற்ற வடக்கின் நீலங்களின் சமரில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி 05 போட்டிகளிலும் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி 04 தடவையும் வெற்றி பெற்றுள்ளது. 05 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.
14 ஆவது வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டத் தொடரில் சிறந்த பந்து வீச்சாளராக இந்துக் கல்லூரி அணியின் வீரர் கே.கரிசாந்தன், சிறந்த துடுப்பாட்ட வீரராக மத்திய கல்லூரி அணியின் வீரர் ஜெ.மதுஷன், சிறந்த களத்தடுப்பாளராக மத்திய கல்லூரி அணி வீரர் என். சாருஜன், தொடரின் ஆட்டநாயகனாக மத்திய கல்லூரி அணி வீரர் ஜீ.கெளசிகன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

















