“தமிழர் அரசியல் பிரச்சினை தீர்க்கப்படாது நீண்டுகொண்டு செல்வதற்கு பிரித்தானியாவே பொறுப்புக்கூற வேண்டும்” என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் செயலாளர் அருள் ஜெயந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
செம்மணிப் புதைகுழி விவகாரத்துக்கு துரித நீதி வேண்டும் என வலியுறுத்தி யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இன்று அடையாளப் போராட்டம் ஒன்று குறித்த கட்சியால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கட்சியின் செயலாளர் ஜெயந்திரன், “இன்று தமிழர் பிரதேசங்களில் மனிதப் புதைகுழிகள் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டு அகழப்பட்டு என்புக் கூடுகள் நூற்றுக்கணக்கில் மீட்கப்பட்டு வருகின்றது.
இவை அனைத்தும் காணாமலாக்கப்பட எமது உறவுகளின் உடலங்களின் எச்சங்களாகவே இருக்கும் என எண்ணத் தோன்றுகின்றது.
ஆனாலும் அவை எவற்றுக்கும் இதுவரை நியாயமோ, பரிகாரங்களோ கிடைக்கவில்லை. மாறாக இழுத்தடிப்புகளும், மறைப்புகளுமே இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை இலங்கை 1948 இல் சுதந்திரம் பெற்றது. இதை பிரித்தானிய அரசு வழங்கிய காலத்திலேயே தமிழ், சிங்கள இனங்களுக்கிடையே அரசியல் இழுபறி இருந்து வந்தது.
ஆனாலும் அதை பிரித்தானிய அரசோ அன்றி அன்றைய தமிழ்த் தலைவர்களோ கண்டுகொள்ளவில்லை.
அன்றைய தமிழ்த் தலைவர்களும் சிங்கள தேசம் வழங்கிய சலுகைகளுக்கு இசைவாகி கண்டுகொள்ளாதிருந்தனர்.
இந்நிலையில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு உள்ளக விசாரணை ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாக இருக்கின்றது. அதேபோன்று சர்வதேச விசாரணையும் வலுவிழந்து கிடக்கின்றது.
அதன்படி தமிழ் மக்களின் உரிமைசார் அரசியல் பிரச்சினைக்கு பிரித்தானிய அரசுதான் தீர்வை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.















