“யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட கழிவுகளை கல்லுண்டாய்ப் பகுதியில் கொட்டுவதில் ஏற்பட்ட முறைகேடு பாரிய பிரச்சினையாக, புதிய உள்ளூராட்சி சபைகள் நடைமுறைக்கு வந்ததும் மாறியுள்ளதாக” வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஆண்டுகளில் இருந்து கல்லுண்டாய்ப் பகுதியில் எரியூட்டப்படும் கழிவுகளால் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் எல்லை மற்றும் வலி. மேற்கு பிரதேச சபை எல்லைப் பகுதிகளில் வாழ்கின்ற பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். இதனால் பல்வேறு வகையான நோய்கள் எற்பட்டு வருகின்றது.
கழிவகற்றல் செயற்பாடுகள் யாழ். மாநகர சபையால் தனியாரிடம் கொடுக்கப்பட்டாலும் அதற்கான முகாமைத்துவம் பல குறைபாடுகளை கொண்டிருப்பதன் காரணமாகவே கல்லுண்டாயில் பெரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
வீதிகளில், பொது இடங்கிளில் கழிவுப் பொருட்களை பொது மக்கள் இடுவதற்கு ஒவ்வொரு பிரிவாக வகைப்படுத்தப்பட்ட வர்ணப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை சேகரித்து சென்று ஒரே இடத்தில் கொட்டப்பட்டு எரியூட்டப்படுகின்றது என்பது தான் பாதிக்கப்பட்ட மக்களின் குற்றச்சாட்டு.
நாள்தோறும் உரிய முறையில் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு சீர்செய்யப்படுமாயின் கல்லுண்டாயில் ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்த்து பாதிக்கப்படும் மக்களுக்குத் தீர்வினை வழங்கலாம்.
கண்லுண்டாயில் முன்பு இருந்த உப்பளம், கடந்த கால மாநகர சபையின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக குப்பைமேட்டுக்குள் மறைந்து நாறிப் போயுள்ளது.
பிரதான வீதியால் பொது மக்கள் செல்லும் போது கழிவகற்றல் வாகனங்கள் சிலவற்றின் நடைமுறைகள், அச்சத்தையும் அசௌகரியத்தையும் கொடுப்பதை மக்களின் முகம் சுழிப்பின் மூலம் உணரமுடிகின்றது. இவை முகாமைத்துவக் குறைபாட்டின் வெளிப்பாடே ஆகும்
புதிய மாநகர சபை பொறுப்புடன் கழிவகற்றல் முகாமைத்துவத்தை சீர்செய்வதன் ஊடாக உரிய முறையில் கழிவுகளை தரம் பிரித்து மீள்சுழற்சிப் பொறிமுறைக்கு உட்படுத்துவதன் மூலம் தீர்வினை நோக்கி நகர முடியும்” எனத் தெரிவித்தார்.