சூட்சுமமான முறையில் வாகனத்தில் கஞ்சா கடத்திய நால்வரையும் 29 கிலோ கஞ்சாவினையும் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
நேற்றைய தினம் 30.06.25 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருந்து கன்டர் வாகனம் ஒன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினர் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் கன்டர் வாகனத்தில் மறைத்து கொண்டுசெல்லப்பட்ட 29 கிலோ கேரளா கஞ்சாவுடன் வாகனத்தின் சாரதி உள்ளிட்ட நால்வரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளார்கள்.
இந்த நடவடிக்கைக்காக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஹேரத் தலைமையில் P.s-36417 பிரேமச்சந்திர, P.S 45555 அஜித், P.S 60969 குமார, P.S 70837 விக்கிரமநாயக்க, P.S 73224 லக்மால், P.C 91451 குமார, P.C 87977 சில்வா, P.C 23746 தாருக்க, P.C 36841 குமார, P.C 88057 விஜிதரன், P.C.D 89996 சம்பத் உள்ளிட்டவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் இருந்து வாகனத்தில் கஞ்சாவினை ஏற்றிக்கொண்டு புதுக்குடியிருப்பு பகுதி நோக்கி பயணிக்கும் போது பொலிஸார் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்கள்.
கன்டர் வாகனத்தின் பெட்டியின் கீழ் பகுதியில் சூட்சுமமான முறையில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரின் வீடு மோப்ப நாய்கள் சகிதம் தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போது அங்கும் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த மூவர் மற்றும் குருநாகல் பகுதியினை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
இவர்களை இன்று (01.07.25) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
இவர்கள் நீண்டகாலமாக முல்லைத்தீவில் இருந்து குருநாகர் பகுதிக்கு கஞ்சா கடத்தி வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.