வணங்காமண் மறுவாழ்வுக் கழகம் பெருமையுடன் நடாத்திய வடக்கு கிழக்கு இணைந்த வணங்காமண் வெற்றிக் கிண்ணம் 2025 ஆம் ஆண்டுக்கான மாபெரும் கிளித்தட்டு போட்டியானது நேற்றைய தினம் (29.06.2025) சிறப்புற இடம்பெற்றிருந்தது.
வணங்காமண் மறுவாழ்வுக் கழகத்தால் நடாத்தப்படுகின்ற வணங்காமண் வெற்றிக் கிண்ண கிளித்தட்டு சுற்றுப் போட்டியின் ஆரம்பப் போட்டியானது 06.06.2025 அன்று அதன் ஸ்தாபகரும், தலைவருமான தர்மலிங்கம் ஜீவரத்தினம் (ஜீவா) தலைமையில் கதிரவன் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டு நேற்றைய தினம் இறுதிப் போட்டியானது கரடிபிலவு, பழம்பாசி, ஒட்டுசுட்டான் பகுதி கதிரவன் விளையாட்டு மைதானத்தில் சிறப்புற இடம்பெற்றிருந்தது.
அழிவு நிலையில் உள்ள தமிழர்களது பாராம்பரிய விளையாட்டாக கிளித்தட்டு இருப்பதனால் அதனை கிராம மட்டங்களில் இருந்து மீளுருவாக்கும் நோக்கோடு வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள அணிகளை உள்வாங்கி ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டிருந்தது.
ஆரம்பப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 10 அணிகள் பங்குபற்றி அதில் இருந்து மூன்று அணிகள் தெரிவு செய்யப்பட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து அந்தந்த மாவட்டங்களில் குறித்த கிளித்தட்டு போட்டியானது ஒவ்வொரு மாவட்ட ரீதியாகவும் இடம்பெற்று, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மூன்று அணிகள் தெரிவு செய்யப்பட்டு போட்டிகள் இடம்பெற்று அதில் தெரிவு செய்யப்படும் அணிகள் இறுதிப் போட்டியில் பங்குபற்றியிருந்தது.
இறுதிப் போட்டியில் யாழ் மாவட்ட ஏ அணியும் , கிளிநொச்சி மாவட்ட ஆதவன் அணியும் பலப்பரீட்சையில் ஈடுபட்டிருந்தனர். விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் 4: 3 என்ற ரீதியில் 4 பழங்களை எடுத்து யாழ் அணியினர் வெற்றியைத் தமதாக்கி கொண்டனர். அத்தோடு யாழ் மாவட்ட பி அணியினர் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டிருந்தனர்.
குறித்த போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற அணிக்கு ஒரு இலட்சம் ரூபா பணப் பரிசும், இரண்டாம் இடத்தைப் பெற்ற அணிக்கு 50,000 ரூபா பணப் பரிசும் , மூன்றாம் இடத்தைப் பெற்ற அணிக்கு 30,000 ரூபா பணப் பரிசும் , வெற்றி பெற்ற அணிகளுக்கான பிரமாண்ட வெற்றிக்கேடயமும், அனைத்து வீரர்களுக்குமான வெற்றிப் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
மாலை நிகழ்வாக தமிழர் பாரம்பரியக் கலை நிகழ்வுகளாக சிவலீமன் தற்காப்புக் கலை மன்ற மாணவர்கள் வீரதீர தற்காப்புக் கலைகளாகிய சிலம்பம், சுருள்வாள், தீப்பந்தம், வாள், கேடயம் போன்ற கலைகளை பாபு மாஸ்டரின் தலைமையில் நடாத்தப்பட்டிருந்தது.
இதன்போது பாடசாலை மாணவர்களுக்களின் கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கும் நோக்குடன் கற்றல் உபகரணங்களும், துவிச்சக்கர வண்டியும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இ.நிஷாந்தன், கௌரவ விருந்தினர்களாக முல்லைத்தீவு வைத்தியசாலை வைத்தியர்களான கெ.சுதர்சன், தனஞ்சயன் சிறப்பு விருந்தினர்களாக நெடுங்கேணி மகா வித்தியாலய அதிபர் சி.நாகேந்திரன், கொக்குளாய் அ.த.க பாடசாலை அதிபர் ஆர்.பாஸ்கரன் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக கிராம சேவையாளர்கள், பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.