தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (29.06.2025) கோலாகலமாக நிகழ்ந்தேறியுள்ளது.
மாணவர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைச் சூழல் பாதுகாப்புச் செயற்பாடுகளில் பங்கேற்பாளர்களாக்கும் நோக்குடன் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் பசுமை அமைதி விருதுகளை வழங்கி வருகிறது.
2024 ஆம் ஆண்டுக்கான விருதுகளை வழங்கும் விழா நேற்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக வவுனியா பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தரும், வியாபாரக் கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியுமான பேராசிரியர் யோ. நந்தகோபன் கலந்து கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராக வட மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர்களில் ஒருவரான எந்திரி ச. சர்வராஜா கலந்து கொண்டிருந்தார்.
இவ்விழாவில் மாணவர்களிடையே அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட சூழல் பொது அறிவுப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களில் முதல் 250 மாணவர்கள் பசுமை அமைதிச் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள். இவர்களில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களுக்குச் சூழலியல் ஆசான் க.சி.குகதாசன் ஞாபகார்த்தப் பசுமை அமைதி விருதுகள் வழங்கப்பட்டன.
முதலாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ரூபிகா அருந்தவம் ஒரு பவுண் எடையுள்ள தங்கப் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இரண்டாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணம் மகாஜனக் கல்லூரியைச் சேர்ந்த கனிவிழி சுதாஜி வெள்ளிப் பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். மூன்றாம் இடத்தைப் பெற்ற மட்டக்களப்பு வின்சற் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த டிலுக்சினி டன்ஸ்ரன், மன்னார் சேவியர் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த றித்திக்கா அன்ரன் பிலிப்ஸ், யாழ்ப்பாணம் மகாஜனக் கல்லூரியைச் சேர்ந்த கனிமொழி கணேசானந்தன் ஆகிய மூவரும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள்.
தாலகாவலர் மு.க. கனகராசா ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டு வரும் சிறந்த சூழல்நேயச் செயற்பாட்டாளருக்கான விருதை இம்முறை பாக்கியநாதன் சசிக்குமார், பாக்கியநாதன் ராஜ்குமார் ஆகிய இருவரும் பெற்றிருந்தார்கள். மரநடுகைப் பணியைச் சிறப்பாகச் செய்து வரும் சகோதரர்களான இருவருக்கும் ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.
மேலும், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் மாணவர்களிடையே நடாத்தப்பட்ட வீட்டுத்தோட்டப் போட்டியில் சிறந்த செய்கையாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் மாணாக்க உழவர்களாகவும், தாவரங்களை அடையாளம் காணும் போட்டியில் அதிக எண்ணிக்கையான தாவரங்களை அடையாளம் கண்டவர்கள் தாவராவதானிகளாகவும் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
புலம்பெயர் தமிழர் கூட்டமைப்பின் அனுசரணையுடன் அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ள இவ்விழாவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறை விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா தொகுத்து வழங்கினார்.
இலங்கையில் வழங்கப்பட்டு வரும் சூழல்சார் விருதுகளில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் அனைவரினதும் கவனத்தை ஈர்த்த முன்னிலை விருதுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.







