“மன்னார் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் கைவிடப்பட்டதைப் போல் செம்மணி மனிதப் புதைகுழியையும் மூடி மறைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் மனிதப் புதைகுழிகள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. உண்மை கண்டறியப்பட வேண்டுமானால் இந்த மனிதப் புதைகுழிகளைச் சரியான முறையில் ஆய்வு செய்தாலே பல விடயங்கள் அம்பலமாகும்.
அதனால்தான் ‘அணையா விளக்கு’ போராட்டம் அறிவிக்கப்பட்டவுடனேயே அதற்கு ஆதரவு தெரிவித்து எமது கட்சியினரும் பெருந்தொகையாக கட்சி அடையாளங்களைத் தவிர்த்து அதிலே கலந்துகொண்டார்கள்.
வெளிநாட்டிலே இருந்த காரணத்தினால் என்னாலும் வேறு சிலராலும் ‘அணையா விளக்கு’ போராட்டத்தில் நேரடியாகக் கலந்துகொள்ள முடியவில்லை.
செம்மணி மனிதப் புதைகுழியும் வடக்கு, கிழக்கிலே அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றைய மனிதப் புதைகுழிகளும் சர்வதேச நிபுணர்களின் மேற்பார்வையோடு சரியான முறையிலே அகழாய்வு செய்யப்பட வேண்டும். விஞ்ஞான பூர்வமாக இது அணுகப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளைச் சர்வதேச நிறுவனங்களுடன் நாம் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றோம். மன்னார் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் கைவிடப்பட்டதைப் போல் செம்மணி மனிதப் புதைகுழியையும் மூடி மறைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை.” – என்றார்.