ஆழ்கடலில் வைத்து மீனின் கொம்பு குத்தி ஏற்பட்ட காயத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை துறைமுகத்தில் இருந்து கடந்த 24.06.2025 அன்று ஆழ்கடலுக்கு தொழிலுக்காக மூன்று பேர் படகில் சென்றுள்ளனர்.
அவர்கள் நேற்று (29.06.2025) ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித்து கொண்டிருக்கும் போது வலையில் பட்ட பெரிய மீனை தூக்குவதற்கு காலை 10.30 மணியளவில் முயற்சி செய்யும் போது தவறி கடலில் விழுந்துள்ளார். இதன் போது அவர் மீது மீனின் கொம்பு வயிற்றுப் பகுதியில் ஏறியதால் காயத்துடன் படகில் ஏறியவர் தனக்கு மீன் குத்திவிட்டது வலி அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மற்ற இருவரும் அவரை கரைக்கு கொண்டுவரும் நோக்கில் கரைக்கு வரும் வழியில் மதியம் 12 மணியளவில் அவரது உயிர் பிரிந்துள்ளது.
நேற்று இரவு 11 மணியளவில் இறந்தவரின் உடல் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தது.
உயிரிழந்தவர் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பாலைநகர் ரஹ்மானிய ஜும்மாஆ பள்ளி வீதியை சேர்ந்த மீரா லெப்பை சஹாப்தீன் (வயது 47) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மரணம் தொடர்பான விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸாரும் மீன்பிடி துறைமுக கடல் ஓர பாதுகாப்பு படையினரும் நடாத்தி வருகின்றனர்.






